மேலும்

ராஜபக்சவினரிடம் மைத்திரி சரணாகதி – கோத்தாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும், கோத்தாபய ராஜபக்சவுக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளதாக, நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிபர் தேர்தலில் நிபந்தனையற்ற ஆதரவை சுதந்திரக் கட்சி அளிக்கும் என்று நேற்றிரவு பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச, மற்றும் கோத்தாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, ஆகியோரிடம் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

முன்னதாக மொட்டு சின்னத்தில் போட்டியிட்டால், ஆதரவளிக்க முடியாது என, மைத்திரிபால சிறிசேன கூறி வந்தார். எனினும் தற்போது நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளது.

இதன் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில், மீரிஹானவில் உள்ள கோத்தாவின் இல்லத்தில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்படவுள்ளது.

நேற்றிரவு அதிபர் செயலகத்தில் நடந்த கலந்துரையாடலில், மகிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, ஆகியோரும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, துமிந்த திசநாயக்க, லசந்த அழகியவன்ன, பைசர் முஸ்தபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்பில் கோத்தாபய ராஜபக்சவுடன் தனியாகவும், பொதுஜன பெரமுனவுடன் தனியாகவும் புரிந்துணர்வு உடன்பாடுகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி செய்து கொள்வதெனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *