‘மக்கள் மேடை’யில் இருந்து ஓடி ஒளிந்த கோத்தா
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களை ஒரே மேடையில் – பொதுவான பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் மேடை எனப்படும், விவாத நிகழ்வில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பங்கேற்கவில்லை.
மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் 4 மணியில் இருந்து கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இந்த மக்கள் மேடை நிகழ்வு இடம்பெற்றது. இது தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பட்டது.
இரண்டு அமர்வுகளாக நடந்த இந்த நிகழ்வில், முதலாவது அரங்கில், சிறிலங்கா சோசலிசக் கட்சியின் வேட்பாளர் அஜந்தா பெரேரா, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, நவ சிஹல உறுமயவின் வேட்பாளர் சரத் மனமேந்திர, ஜாதிக சங்வர்த்தன பெரமுனவின் வேட்பாளர் றொகான் பலேவத்த, சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் வஜிரபாணி விஜேசிறிவர்த்தன, முன்னிலை சோசலிச கட்சியின் வேட்பாளர் முதிந்த நாகமுவ, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் ஆரியவன்ச திசநாயக்க, ஐக்கிய சோசலிச கட்சியின் வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய ஆகிய எட்டு வேட்பாளர்களும் பங்கேற்று தமது கொள்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இரண்டாவது அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள இயக்கத்தின் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவும் பங்கேற்று தமது கொள்கைகளை வெளிப்படுத்தினர்.
இதில் மூன்றாவதாக அழைக்கப்பட்டிருந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச பங்கேற்கவில்லை.