போட்டியிட இன்று கடைசி வாய்ப்பு – நாளை வேட்புமனுத் தாக்கல்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான கடைசி வாய்ப்பு இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது.
வேட்பாளர்கள் இன்று காலை 9 மணி தொடக்கம், 12 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, நேற்று முன்தினம் வரை 33 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இன்று நண்பகலுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலஎல்லை முடிவடைகிறது.
நாளை காலை 9 மணிக்கும், 12 மணிக்கும் இடையில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.
இதனை முன்னிட்டு தேர்தல்கள் செயலகம் அமைந்துள்ள ராஜகிரிய மற்றும் அதனை அண்டிய பகுதியில், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட 1700 சிறிலங்கா காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் முதல் முறையாக, சிறிலங்கா விமானப்படை வான்வழி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
தேர்தல்கள் செயலகம் அமைந்துள்ள ராஜகிரிய, சரண மாவத்தைக்கு மேலாக ட்ரோன் எனப்படும், ஆளில்லா பறக்கும் கருவிகளை பறக்க விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கண்காணிப்பதற்காக, சிறிலங்கா விமானப்படை வான்வழி ரோந்துப் பணியை மேற்கொள்ளவுள்ளது.
வரும் நொவம்பர் 16ஆம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் வாக்களிப்பதற்கு 15.6 மில்லியன் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.