‘புலனாய்வுத் தகவல் எனக்கு தெரிவிக்கப்படவில்லை’ – என்கிறார் சிறிலங்கா அதிபர்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக புலனாய்வு எச்சரிக்கைகள் குறித்து, சிறிலங்கா அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்கூட்டியே எந்த அதிகாரியும் தகவல்களை வழங்கியிருக்கவில்லை.
காவல்துறை மா அதிபர் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றிருந்த- ஏப்ரல் 8ஆம் நாள் நடந்த மாதாந்த பாதுகாப்புக் கூட்டத்தில் கூட, அதுபற்றி கூறப்படவில்லை.
தேசிய பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்ட விடயங்கள், அதிகாரபூர்வமற்ற முறையில் ஊடகங்களில் செய்திகளாக வெளிவந்த நிலையில், தேசிய பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டது.
இந்த தேசிய பாதுகாப்புக் குழு வாரத்தில் இரண்டு தடவைகள் கூட்டப்பட்டது. சிறிலங்கா அதிபரும் வாரம் ஒருமுறை இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நட்பு நாடு ஒன்றினால் வழங்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை தொடர்பாக, பாதுகாப்புச் செயலரோ, காவல்துறை மா அதிபரோ, அல்லது வேறு எந்த அதிகாரியோ, சிறிலங்கா அதிபருக்குத் தெரிவித்திருக்கவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.