சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக ஜெனரல் சாந்த கொட்டேகொட
சிறிலங்கா பாதுகாப்புச் செயலராக, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார். சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை இந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.
கடந்த 21ஆம் நாள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவை பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர், பதவி விலகியிருந்தார்.
எனினும், புதிய பாதுகாப்புச் செயலரை நியமனம் செய்வதில் இழுபறிகள் நிலவி வந்தன. இந்தப் பதவிக்கு நியமிக்க முற்பட்ட போது பலரும் அதனை ஏற்க மறுத்து வந்தனர்.
இந்த நிலையிலேயே முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கொட்டேகொட இன்று புதிய பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சிறிலங்கா இராணுவத்தின் 17 ஆவது தளபதியாக, 2004 ஜூலை 1ஆம் நாள் தொடக்கம், 2005 டிசெம்பர் 05ஆம் நாள் வரை பதவி வகித்திருந்தார்.