அடுத்த மாதம் கொழும்பு வருகிறது சிறிலங்கா கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பல்
சிறிலங்கா கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள- மிகப்பெரிய போர்க்கப்பல், அடுத்த மாதம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க கடலோரக் காவல் படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட USCG Sherman என்ற போர்க்கப்பலே, மீளத் திருத்தியமைக்கப்பட்டு சிறிலங்கா கடற்படைக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, P-626 என்ற இலக்கமிடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பல் அமெரிக்காவின் ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் கொழும்பு நோக்கிப் புறப்பட்டது.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் இந்தப் போர்க்கப்பல் கொழும்பை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இந்தப் போர்க்கப்பலில் உலங்குவானூர்தி இறங்குதளமும், கடற்படை உலங்குவானூர்தி தரிப்பிட வசதியும் உள்ளது.
சிறிலங்கா கடற்படையில் இந்தக் கப்பல் இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னர், இதுவே மிகப் பெரிய போர்க்கப்பலாக இருக்கும்.