அமெரிக்காவுடன் பேச்சுக் கூட நடத்தவில்லை – ருவன் விஜேவர்த்தன
சிறிலங்காவில் அமெரிக்காவின் இராணுவத் தளம் எதையும் அமைப்பது தொடர்பாக அந்த நாட்டுடன் எத்தகைய உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை என்று, சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,“ எந்தவொரு சூழ்நிலையிலும் சிறிலங்காவில் வெளிநாடு ஒன்றின் இராணுவத் தளத்தை அமைப்பதற்கான தேவை இல்லை. அவ்வாறான எந்த நோக்கமும் கிடையாது.
எதிர்க்கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துவதற்காக, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான ஏமாற்று வேலையில் ஈடுபடுகின்றனர்.
இங்கு பரவியுள்ள சேனைப் புழுவும் கூட அனைத்துலக சதித் திட்டம் என்றே அவர்கள் கூறுகிறார்கள்.
பல்வேறு நாடுகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும், இங்கு அமெரிக்காவின் தளத்தை அமைப்பது தொடர்பாக எந்தவொரு உடன்பாட்டிலும், கையெழுத்திடவில்லை.
இதுபற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் எந்தப் பேச்சுக்களும் கூட நடத்தப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.