மேலும்

பிரிகேடியர் பிரியங்கவுக்கு லண்டன் நீதிமன்றம் பிடியாணை – குற்றவாளியாகவும் அறிவிப்பு

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவின் பொதுக் கட்டளைச் சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் மஜிஸ்ரேட் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையையும் பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி 4ஆம் நாள் சிறிலங்காவின் சுதந்திர நாளன்று, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அப்போது, சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, வெளியே வந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பார்த்து, கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல சைகை காண்பித்து எச்சரிக்கை செய்தார்.

இதை அடுத்து, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரித்தானியாவில் கோரிக்கை வலுத்தது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இவரை பாதுகாப்பு ஆலோசகர் பணியில் செயற்படுவதை இடைநிறுத்திய போதும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அந்த உத்தரவை ரத்துச் செய்து தொடர்ந்து பணி செய்ய உத்தரவிட்டார்.

எனினும், லண்டனில், பிரிகேடியர் பெர்னான்டோவுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்புகள் இருந்தால், கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் புலம்பெயர் தமிழர்களின் முன்முயற்சியால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று முன்னிலையாகுமாறு பிரியங்க பெர்னான்டோவுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது. எனினும், அவரோ அல்லது சிறிலங்கா தூதரக அதிகாரிகளோ விசாரணைக்கு முன்னிலையாகவில்லை.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், பொது கட்டளைச் சட்டத்தை மீறி பிரியங்க பெர்னான்டோ குற்றமிழைத்துள்ளார் என்று அறிவித்தார்.

அத்துடன் குற்றவாளியான அவரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்துமாறும் பிடியாணை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *