நிதியுதவியைப் பெற மங்கள சமரவீர அமெரிக்காவுக்குப் பயணம்
அனைத்துலக நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுக்களை நடத்துவதற்கு சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, திறைசேரி செயலர் உள்ளிட்ட நிதியமைச்சின் அதிகாரிகள் குழுவொன்றும், மங்கள சமரவீரவுடன் நேற்று முன்தினம் வொசிங்டனுக்குப் பயணமானது.
இவர்கள் அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர், ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான திணைக்களத்தின் பணிப்பாளர், அனைத்துலக நாணய நிதியத்தின் சிறிலங்கா குழுவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.
அனைத்துலக நாணய நிதியத்தின் மறுசீரமைப்புத் திட்டத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின விருப்பத்தை, அமைச்சர் மங்கள சமரவீர இந்தச் சந்திப்புகளின் போது வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.