மேலும்

சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இன்று மோடி, சுஷ்மாவைச் சந்திக்கிறது

இரா.சம்பந்தன், டக்ளஸ் தேவானந்தா, மனோ கணேசன் ஆகியோரை உள்ளடக்கிய சிறிலங்கா நாடாளுமன்றக் குழு இன்று இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் அழைப்பின் பேரில், சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு நேற்று புதுடெல்லியைச் சென்றடைந்தது.

இந்தக் குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,  அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா, கயந்த கருணாதிலக, நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, விஜித ஹேரத்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் இன்று இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெற விடுக்கப்பட்ட அழைப்பை தினேஸ் குணவர்த்தன நிராகரித்திருந்தார். அதேவேளை, அமைச்சர் றிசாத் பதியுதீனும் இந்தப் பயணக் குழுவில் இடம்பெற்றிருந்த போதும், புதுடெல்லிக்கு அவரும் செல்லவில்லை.

இந்தக் குழுவினர் புதுடெல்லிப் பயணத்தை முடித்துக் கொண்டு ஆக்ரா மற்றும் பெங்களூருவுக்கும் செல்லவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *