மேலும்

மத்தல குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சு – சிறிலங்கா அமைச்சர்

மத்தல விமான நிலையத் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மத்தல விமான நிலையத்தை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

மத்தல விமான நிலையத்தை கூட்டாக இயக்குவது தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் இந்தக் கருத்து கொழும்புக்கு குழப்பமான சமிக்ஞைகளை அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம், இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

“மத்தல விமான நிலைய அபிவிருத்தி திட்டம் தொடர்பாக பேச்சுக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

இன்னமும் இரண்டு தரப்புகளுக்கும் இடையில் உடன்பாடு இறுதிப்படுத்தப்படவில்லை என்ற அடிப்படையிலேயே பெரும்பாலும், இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, நாடாளுமன்றத்தில் அந்தக் கருத்தை வெளியிட்டிருக்கலாம்” என்று தெரிவித்தார்.

மகிந்தவின் எச்சரிக்கை

இதற்கிடையே, கொழும்பில் நேற்றுமுன்தினம் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் இலக்குடன் நடத்தப்பட்ட ஜன பலய பேரணியில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவின் தேசிய சொத்துக்களை வாங்க வேண்டாம் என்று வெளிநாடுகளுக்கு எச்சரித்துள்ளார்.

“வெளிநாடுகளுக்கு ஒரு கோரிக்கையை விடுக்கிறேன். சிறிலங்காவின் தேசிய சொத்துக்களை வாங்காதீர்கள். நாங்கள் விரைவில் ஆட்சிக்கு வந்ததும் அவற்றை தேசியமயமாக்குவோம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *