மறுசீரமைப்புகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும்
சிறிலங்காவின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்க செயல்முறைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மார்கே தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாளை முன்னிட்டு நேற்றுமுன்தினம் கொழும்பில் நடந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”இந்த விவகாரங்களில் முன்னேற்றங்கள் அனைத்து இலங்கையர்களுக்கும் செழிப்பையும், நிலையான அமைதியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருக்கிறது.
சிறிலங்காவின் மீன் உற்பத்திகளுக்கான தடை நீக்கப்பட்ட பின்னரும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகை மீண்டும் வழங்கப்பட்டதை அடுத்தும் சிறிலங்காவின் பொருளாதாரத்தில் சாதகமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.