மேலும்

சிறிலங்கா அதிபரின் உரை மீது விவாதம் நடத்த சிறிலங்கா அரசு இணக்கம்

சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் மே 8ஆம் நாள் கூட்டப்படும் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிகழ்த்தவுள்ள அரசாங்கத்தின் கொள்கை பற்றிய அறிக்கை மீது விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றக் கூட்டத்தை மே 8ஆம் நாள் வரை ஒத்திவைத்திருந்தார்.

நாடாளுமன்றம் சிறிலங்கா அதிபரால் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூட்டப்படும் போது, கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து அதிபர் உரையாற்றுவது வழக்கம்.

அதன்படி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே 8ஆம் நாள் நாடாளுமன்றத்தில், அரசாங்கத்தின் கொள்கை பற்றி விளக்கமளிக்கும் உரையை நிகழ்த்தவுள்ளார்.

இந்த உரை மீது விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, அதனைத் தோற்கடிக்க கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டிருந்தது.

இந்தநிலையில் சிறிலங்கா அதிபரின், கொள்கை விளக்க உரை மீது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்றும், இது சிம்மாசன உரை அல்ல என்றும் அரசதரப்பில் கூறப்பட்டது.

எனினும், நேற்று நடத்தப்பட்ட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில், அதிபரின் உரை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன, வலியுறுத்தினார்.

இதையடுத்து, மே 10 ஆம் நாள் ஒரு நாள் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *