மேலும்

வடக்கு, கிழக்கில் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் மே நாள் பேரணிகள்

உலகத் தொழிலாளர் நாளை முன்னிட்டு, நேற்று வடக்கு கிழக்கில் பல்வேறு மே நாள் பேரணிகள் அரசியல் கட்சிகளின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜேவிபி போன்ற அரசியல் கட்சிகளும், நீதி மற்றும் சமத்துவத்துக்கான மக்கள் அமைப்பும் நேற்று மே நாள் பேரணிகளை நடத்தியிருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் பேரணிகள், வடக்கில் இரண்டு இடங்களிலும் கி்ழக்கில் இரண்டு இடங்களிலும் இடம்பெற்றன.

வடக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே நாள் பேரணி வடமராட்சி – நெல்லியடியில் ஆரம்பித்து அல்வாயில் முடிவடைந்து, அங்கு பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

கிளிநொச்சியில், முழங்காவிலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு மே நாள் பேரணியும் பொதுக் கூட்டமும் இடம்பெற்றன.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே நாள் பேரணி நல்லூர் சட்டநாதர் கோவிலில் ஆரம்பித்து, முத்திரைச்சந்தி, கிட்டு பூங்காவில் முடிவடைந்து அங்கு கூட்டம் இடம்பெற்றது.

ஜேவிபியின் மேதினப் பேரணி நேற்று யாழ். நகரில் இடம்பெற்று, யாழ். மாநகரசபை மைதானத்தில்  பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இந்தப் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

கிளிநொச்சியில் நீதி மற்றும் சமத்துவத்துக்கான மக்கள் அமைப்பின் மே நாள் பேரணி இடம்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வெல்லாவெளியில், மே நாள் பேரணியும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றிருந்தன.

திருகோணமலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மே நாள் கூட்டம் இடம்பெற்றது.

இந்த பேரணிகள், கூட்டங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் மாத்திரமன்றி, தமிழ் மக்கள் மீதான அடங்குமுறைகளும், வெளிப்படுத்தப்பட்டதுடன், தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் வலி்யுறுத்தப்பட்டது.

இந்தப் பேரணிகளில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *