சாவகச்சேரி நகர முதல்வர் பதவிக்கு கூட்டமைப்பும் போட்டியிடும்?
யாழ். மாநகர சபைக்கான முதல்வர் பதவிக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, வி.மணிவண்ணனைப் போட்டியில் நிறுத்தியதால், நகரசபையில், முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் போட்டியில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிற்பகல் சாவகச்சேரி நகரசபையின் புதிய முதல்வர், பிரதி முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இடம்பெறவுள்ளது.
அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் ஆட்சியமைப்பதை தாமும் குழப்பமாட்டோம் என்றும், அதுபோலவே, தாம் அதிக ஆசனங்களைப் பெற்ற சபைகளில் ஏனைய கட்சிகளும் குழப்பம் விளைவிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தது.
இந்தநிலையில், கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்ற, யாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, போட்டியில் இறங்கினால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களை வென்ற சாவகச்சேரி நகரசபையில் தாமும் போட்டியிடுவதென நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது.
அவ்வாறான சூழலில், சிவமங்கை இராமநாதனின் பெயரை நகர முதல்வர் பதவிக்கு நிறுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
இன்று யாழ். மாநகரசபை முதல்வர் பதவிக்கு மணிவண்ணனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்தியதால், சாவகச்சேரி நகரசபைக்காக முதல்வர் தெரிவின் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்மொழியும் வேட்பாளருக்கு எதிராக, கூட்டமைப்பு சிவமங்கை இராமநாதனை போட்டியில் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.