சார்க் மாநாட்டை நடத்த சிறிலங்காவிடம் ஒத்துழைப்புக் கோருகிறது பாகிஸ்தான்
அடுத்த சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்த சிறிலங்கா ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நேற்று நடத்திய பேச்சுக்களின் போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபரின் இல்லத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களின் போது, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டதுடன், 3 புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.
பிராந்தியத்தில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது.
இந்தப் பயணத்தின் போது, வெளிவிவகாரம், பாதுகாப்பு, முதலீடு, வர்த்தகம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கான இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, பாகிஸ்தான் பிரதமர் இல்லத்தில், பிரதமர் சாஹித் கான் அப்பாசியையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தப் பேச்சுக்கள், உதவியாளர்களின்றி, தனியாக இருவருக்கும் இடையில் மூடிய அறைக்குள் நடத்தப்பட்டன.
நேற்றுமுன்தினம் நடந்த பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இஸ்லாமாபாத் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.