இன்று பாகிஸ்தான் செல்கிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று நாட்கள் பயணமாக இன்று பாகிஸ்தானுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய நாள் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகப் பங்கேற்குமாறு, அதிபர் மமூன் ஹுசேன் விடுத்த அழைப்பின் பேரிலேயே சிறிலங்கா அதிபர் அங்கு செல்லவுள்ளார்.
எதிர்வரும் 24ஆம் நாள் வரை பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தான் அதிபர் மமூன் ஹுசேன், பிரதமர் சஹிட்கான் அப்பாசி ஆகியோருடன் பேச்சுக்களையும் நடத்தவுள்ளார்.
அத்துடன், இரண்டு நாடுகளுக்கு இடையிலும், பாதுகாப்பு, மூலோபாயக் கற்கைகள், கல்வி முகாமைத்துவம், வெளிவிவகாரத் துறைகளிலான நிபுணத்துவ ஆற்றலைக் பகிர்ந்து கொள்வதுதொடர்பான புரிந்துணர்வு உடன்பாடுகளிலும் இந்தப் பயணத்தின் போது கையெழுத்திடப்படவுள்ளது.