சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்
சமூக வலைத்தளங்களின் மூலம், இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் விரைவில் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.
இசிபத்தான கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
‘ஏனைய நாடுகளில் நடைமுறையில் உள்ள இத்தகைய சட்டங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.
சமூக ஊடகங்களில் இனவெறுப்பு கருத்துக்களை வெளியிடுவதைக் கட்டுப்படுத்த உலகில் பல நாடுகள் சட்டங்களை இயற்றியுள்ளன.
இனவெறுப்பைத் தூண்டுவதை தடுக்கும் சட்டங்கள் பிரித்தானியாவில் உள்ளன. கென்யாவிலும் அத்தகைய சட்டங்கள் உள்ளன. ஜேர்மனி சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டிருக்கிறது.
இதுபோன்ற சட்டம் ஒன்றை பிலிப்பைன்ஸ் அரசு வரைந்து செனட் சபையில் சமர்ப்பித்துள்ளது.
சமூக ஊடகங்கள் தொடர்பாக ஏனைய நாடுகள் எத்தகைய சட்டங்களைக் கொண்டிருக்கின்றன என்று ஆராயுமாறு வெளிவிவகார அமைச்சிடம் பணித்துள்ளேன். அதனை நாம் பின்பற்றலாம்.
அதேவேளை, சமூக ஊடகங்களை தடை செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் எந்த நகர்வையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.