35 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் உயிர்த்தது ‘சுதந்திரன்’
தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ‘சுதந்திரன்’, 35 ஆண்டுகளுக்குப் பின்னர் ‘புதிய சுதந்திரன்’ என்ற பெயரில் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் நேற்று ‘புதிய சுதந்திரன்’ வாரஇதழின் வெளியீட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், மற்றும் பிரமுகர்கள், கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு, 1947ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் நாளில் இருந்து நாளிதழாகவும், பின்னர் வாரஇதழாகவும் வெளிவந்த ‘சுதந்திரன்’, 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்களை அடுத்து எழுந்த சூழ்நிலைகளால் இடைநிறுத்தப்பட்டது.
இதன் ஆசிரியர்களாக புகழ்பெற்ற ஊடக ஆசிரியர்களான நடேசையர், எஸ்.டி.சிவநாயகம், கோவை மகேசன் ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.
35 ஆண்டுகள் கழித்து, ‘புதிய சுதந்திரன்’ என்ற பெயரில் இந்த இதழ் மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது.