சுவிசில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – விசாரணைகள் முடிவு, தீர்ப்பு ஜூனில்
சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள 13 ஈழத் தமிழர்களுக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு நேற்று முடிவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.
1999ஆம் ஆண்டுக்கும், 2009ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், விடுதலைப் புலிகளுக்காக 15 மில்லியன் சுவிஸ் பிராங் நிதியை சேகரித்து, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோனார் என்று சுவிஸ், ஜேர்மனி, சிறிலங்காவைச் சேர்ந்த 13 பேருக்கு எதிராக சுவிஸ்“ சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குத் தொடர்ந்திருந்தது.
பெலின்சோனா சமஷ்டி குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 8 வாரங்களாக நடந்து வந்த இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 14ஆம் நாள் அறிவிக்கப்படும்.
இந்த வழக்கிற்கு 3.79 சுவிஸ் பிராங் (4 மில்லியன் டொலர்) செலவு ஏற்பட்டுள்ளதாகவும், தமது கட்சிக்காரரான பிரதிவாதிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், இந்த செலவுத் தொகையை அவர்கள் செலுத்த நேரிடும் என்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவாளரான ஜீன் – பியரே கர்பாடே தெரிவித்துள்ளார்.