இன்று கொழும்பு வருகிறார் மலேசியப் பிரதமர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் மலேசியப் பிரதமர் டத்தோ சிறி மொகமட் நஜிப் பின் துவான் அப்துல் ரசாக் மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளார்.
இவர் அதிகாலையில் தனி ஜெட் விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
33 ஆண்டுகளில் மலேசியப் பிரதமர் ஒருவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் முதல் அரசு முறைப் பயணம் இதுவாகும்.
மலேசியப் பிரதமருக்கு நாளை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதையடுத்து இருதரப்புப் பேச்சுக்கள் நடத்தப்படும்.
இந்தப் பேச்சுக்களின் போது, மூன்று புரிந்துணர்வு உடன்பாடுகளும் கையெழுத்திடப்படும்.
சிறிலங்கா பிரதமருடனான பேச்சுக்களின் போது, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் மலேசியப் பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார்.
மலேசியப் பிரதமருடன், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்டு குழுவும் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தப் பயணத்தின் போது மலேசியப் பிரதமருக்கு சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தனித்தனியான அரசுமுறை விருந்துபசாரங்களை அளிக்கவுள்ளதுடன், தனித்தனியான பேச்சுக்களையும் நடத்தவுள்ளனர்.