விஜேதாச ராஜபக்சவுக்கு எதிராக ஐதேக செயற்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம்
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் மீது ஐதேக செயற்குழுக் கூட்டத்திலும், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் ஒருமனதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அசு மாரசிங்கவும், சிட்னி ஜெயரத்னவும், இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்திருந்தனர். ஐந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக ஐதேக தலைமையகத்தில் நடந்த கூட்டங்களில் இரண்டு மணி நேரமாக விவாதிக்கப்பட்டது.
நீதியமைச்சராக தனது கடமையைச் சரவரச் செய்யத் தவறிவிட்டார், ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, ஊழல் மோசடிகளை கையாளுவதற்கான புதிய சட்டங்களை கொண்டு வரத் தவறி விட்டார், குற்றவியல் வழக்குகளைத் தாமதப்படுத்தி விட்டார், என்றும் விஜேதாச ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க விஜேதாச ராஜபக்சவுக்கு வரும் 21ஆம் நாள் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.