சிறிலங்காவுக்கு 10 மீட்புப் படகுகளை அனுப்பியது அவுஸ்ரேலியா
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு, அவுஸ்ரேலிய அரசாங்கம் முதற்கட்டமாக 10 இறப்பர் படகுகள் மற்றும் இயந்திரங்கள் கொண்ட உதவிப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
சிறிலங்கன் விமான சேவையின் விமானம் மூலம், இந்த அவசர உதவிப் பொருட்கள் நேற்றுக்காலை எடுத்து வரப்பட்டன.
கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் உள்ள ரங்கல கடற்படைத் தளத்தில் வைத்து சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர், பிரைஸ் ஹட்சிசன், இந்தப் படகுகளை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம், முறைப்படி கையளித்தார்.
மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும், 10 இறப்பர் படகுகள், மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்கள் இதன்போது கையளிக்கப்பட்டன.
உடனடியாகவே இந்தப் படகுகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.