சிறிலங்காவை சக்திவாய்ந்த நாடு என்கிறார் வியட்னாம் பிரதமர்
சிறிலங்காவை, இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த நாடு எனப் புகழாரம் சூட்டியுள்ளார் வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக்.
வியாட்னாமுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று காலை சந்தித்துப் பேசிய பின்னர் ஊடகங்களின் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹனோயில் உள்ள வியட்னாம் அதிபர் மாளிகையில் நடந்த சந்திப்பின் பின்னர், கருத்து வெளியிட்ட வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக்,
“சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வியட்னாம் பயணத்தின் மூலம், இரண்டு நட்பு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய அத்தியாயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
எல்லா வேளைகளிலும் சிறிலங்காவும், சிறிலங்கா மக்களும் வியட்னாமுடன் கொண்டுள்ள நட்புறவை நாங்கள் மதிக்கிறோம்.
சிறிலங்கா, இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த நாடு.
இரண்டு நாடுகளுக்கும் இடையில், பெற்றோலிய எண்ணெய் மற்றும் எரிவாயு, உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள், விவசாயம் மற்றும் மீன்பிடி, புதுப்பிக்கத்தக்க சக்தி, விமான சேவைகள், கல்வி, சுற்றுலா போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான உடன்பாட்டில் நாம் கையெழுத்திட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பிரதமர்,
“இரண்டு நாடுகளும் மோசமான போர்களை சந்தித்தவை. தற்போது, அபிவிருத்திப் பாதையில் செல்கின்றன. நடுத்தர வருமானமுள்ள நாடுகளாக முன்னேறியுள்ளன.
வியட்னாமிடம் பாடங்களைக் கற்றுக் கொண்டு சிறிலங்காவை அபிவிருத்தி செய்வது அரசாங்கத்தின் எண்ணமாகும்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், வியட்னாம் பிரதமரை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.