கப்பலில் இருந்து தொடர்ந்து புகை வருவதால் தீயணைப்பு நடவடிக்கைகள் நீடிப்பு
கொழும்புக்கு அப்பால் தீப்பிடித்த எம்.வி.டானியேலா என்ற பனாமா கப்பலில் இருந்து இன்னமும் வெண்ணிறப் புகை கிளம்பிக் கொண்டிருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த போது, கடந்த செவ்வாய்க்கிழமை எம்.வி.டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் தீப்பற்றியது.
கொள்கலன்களில் இருந்த பொருட்களிலேயே தீப்பித்த நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு அவசர உதவிக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
உடனடியாகவே சிறிலங்கா கடற்படை விரைந்து சென்று தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையின் உதவியும் பெறப்பட்டது.
இதன் மூலம் நேற்றுமுன்தினம் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது. எனினும், கொள்கலன்களில் இருந்து வெண்ணிற புகை வந்து கொண்டிருப்பதால், இந்திய கடலோரக் காவல்படையின் சூர் என்ற கப்பலும், சிறிலங்கா கடற்படையின் சாகர என்ற கப்பலும், தொடர்ந்து நீரைத் தெளித்து வருகின்றன.
சிறிலங்கா விடானப்படை உலங்கு வானூர்தி ஒன்றும் இந்த தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் காரியல் மற்றும் தர்ஷக் ஆகிய கப்பல்களும், இலங்கைக் கடற்படையின் அதிவேக தாக்குதல் படகுகளும் கப்பலுக்கு அண்மையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
தற்போது கொழும்பு துறைமுகத்தில் இருந்து 14 கடல்மைல் தொலைவில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீயினால் பல கொள்கலன்கள் எரிந்து உருகிப் போயுள்ளன. சில கொள்கலன்களில் இருந்து இன்னமும் புகை வந்து கொண்டிருக்கின்றன.
இந்தக் கொள்கலன்களில் என்ன பொருட்கள் இருக்கின்ற என்ற விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கப்பலில் ஏற்பட்ட தீயினால் கடலில் எண்ணெய் கசிவுகள் அல்லது இரசாயனக் கசிவுகள் ஏற்பட்டுள்ளதா என்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.