கொழும்பில் ஜேர்மனி இராஜதந்திரிகளுக்காக நடத்தப்பட்ட இரண்டு நாள் கருத்தரங்கு
மாறி வரும் பொருளாதார வளர்ச்சி, அரசியல் மாற்றங்கள், மற்றும் பாதுகாப்பு சூத்திரங்களின் பின்னணியில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை மையப்படுத்திய அரசியல், பொருளாதார ஈர்ப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் முன்னெப்போதையும் விட, ஒத்துழைப்பும், கலந்துரையாடலும் அதிகம் தேவைப்படுகிறது. எனவே தான், இந்தியப் பெருங்கடலின் நடுவில் உள்ள நாடான சிறிலங்காவில், பிராந்திய ஜேர்மனியத் தூதுவர்களுக்கான கருத்தரங்கை நடத்துவதற்கு மேஜர்மனி வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு தாஜ் சமுத்ரா விடுதியில், கடந்த ஏப்ரல் 5ஆம், 6ஆம் நாள்களில் இந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது.
இதில், இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கான 30இற்கும் மேற்பட்ட ஜேர்மனி தூதுவர்கள் மற்றும் ஜேர்மனி வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
ஜேர்மனி வெளிவிவகார அமைச்சின் செயலர் மார்க்கஸ் எர்டெரர் இந்தக் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார். முதல் நாள் நிகழ்வில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றியிருந்தார்.
இந்தியப் பெருங்கடலில் மூலோபாய மாற்றங்கள் என்ற தொனிப் பொருளில் சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இந்தோனேசியாவின் கடல்சார் விவகாரங்களுக்கான பிரதி ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆரிப் ஹவாஸ் ஓக்ரோசினோ, ஓமானின் இராஜதந்திர விவகாரங்களுக்கான பதில் அடிநிலைச் செயலர் கலாநிதி மொகமட் அவாட் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினார்.
ஏப்ரல் 6ஆம் நாள், நடந்த கருத்தரங்கில், சிறிலங்கா மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புகள் என்ற விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் கலந்து கொண்டனர்.