இந்திய-சிறிலங்கா இராணுவங்கள் பங்கேற்கும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சி
இந்திய – சிறிலங்கா சிறப்புப் படைப்பிரிவுகள் பங்கேற்கும், மித்ர சக்தி என்ற கூட்டுப் பயிற்சி அம்பேபுஸ்சவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சிங்கப் படைப்பிரிவு தலைமையகத்தில் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
சிறிலங்கா- இந்திய இராணுவங்களுக்கிடையில் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வரும் மித்ரசக்தி கூட்டுப் பயிற்சியின் நான்காவது கட்டம் இதுவாகும். இரண்டு வாரங்கள் இந்தக் கூட்டுப் பயிற்சி நீடிக்கவுள்ளது.
இதில் பங்கேற்க, மேஜர் ராகேஷ் ரோசன் தலைமையில் ஆறு அதிகாரிகள் உள்ளிட்ட 45 இந்திய இராணுவத்தினர் சிறிலங்கா வரவுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத்தின் இலகு காலாட்படைப்பிரிவைச் சேர்ந்த 45 படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா தரப்பில் பங்கேற்கவுள்ளனர்.
சிறிலங்கா இராணுவத் தளபதியின் மேற்பார்வையில் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெறவுள்ள அதேவேளை, இந்தப் பயிற்சி நிறைவு நாளுக்கு முதல் நாளான நவம்பர் 6ஆம் நாள், இறுதிக்கட்டப் பயிற்சியை மதிப்பீடு செய்வதற்காக பிரிகேடியர் சுஜீத் சிவாஜி படேல் தலைமையிலான இந்திய இராணுவ அதிகாரிகள் குழுவொன்றும் சிறிலங்கா வரவுள்ளது.
மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி இரண்டு தடவைகள் இந்தியாவில் இடம்பெற்றிருந்தன. சிறிலங்காவில் இரண்டாவது தடவையாக இந்தப் பயிற்சி இடம்பெறவுள்ளது.