ரவிராஜ் கொலை வழக்கு ஜூரிகள் சபைக்கு மாற்றப்படுமா? – அடுத்த வாரம் முடிவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கை, ஜூரிகள் சபையில் விசாரணை செய்வதா என்பது குறித்து வரும் 27ஆம் நாள் உத்தரவு பிறப்பிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ரவிராஜ் படுகொலை வழக்கை சிங்கள மொழிபேசும் ஜூரிகள் சபையின் முன்பாக விசாரிக்க வேண்டும் என்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு அரசதரப்பு சட்டவாளர்களும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டவாளரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதையடுத்து, இருதரப்பும் தமது நிலைப்பாடுகள் குறித்த எழுத்துமூல வாதத்தை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய இருதரப்பும் தமது எழுத்துமூலமான கருத்துக்களை முன்வைத்துள்ளன.
இதன் அடிப்படையில், இந்த வழக்கை ஜூரிகள் சபை முன்பாக விசாரிப்பதா இல்லையா என்பது குறித்த முடிவு வரும் 27ஆம் நாள் அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக நேற்று அறிவித்துள்ளார்.