மேலும்

25 நாட்கள் சீனாவில் தங்கவுள்ள கோத்தா

gotabaya-rajapakseசீனாவில் நடக்கும் பாதுகாப்புக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அங்கு, 25 நாட்கள் வரை தங்கியிருக்கலாம் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சீனாவின் பீஜிங் நகரில், ஏழாவது ஷியாங்சான் அமைப்பின் பாதுகாப்புக் கருத்தரங்கு வரும் 10ஆம் நாள் தொடங்கி, 12ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது.

இந்த கருத்தரங்கிற்கு இராணுவ விஞ்ஞானத்துக்கான சீன சங்கம் மற்றும் அனைத்துலக மூலோபாய கற்கைகளுக்கான சீன நிறுவகம் ஆகியன இணை அனுசரணை வழங்கியுள்ளன.

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்குமாறு சீன பாதுகாப்பு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சேவையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள், அனைத்துலக அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னாள் அரச மற்றும் இராணுவ அதிகாரிகள், கல்வியியலாளர்கள், புலமையாளர்களுக்கும் இந்தக் கருத்தரங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் 60இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஆறாவது ஷியாங்சான் அமைப்பின் மாநாட்டில், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி கலந்து கொண்டிருந்தார். இம்முறையும் அவர் சிறிலங்காவின் சார்பில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சீனா செல்வதற்கு கோத்தாபய ராஜஸபக்சவுக்கு கொழும்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இதையடுத்து அவர் கடந்த 5ஆம் நாள் சீனாவுக்குப் பயணமாகியுள்ளார். வரும் 12ஆம் நாள் இந்தக் கருத்தரங்கு முடிந்த பின்னரும் அவர் சீனாவில் தொடர்ந்து தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

வரும் 30ஆம் நாளுக்குள் அவர் கொழும்பு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 25 நாட்கள் வரை அவர் சீனாவில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *