வடக்கில் இருந்து முகாம்களை அகற்றும் திட்டம் இல்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி
வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமையும் அகற்றுகின்ற திட்டம் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அவர்,
வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான கருத்துக்களின் பின்னால் எந்த உண்மையும் கிடையாது.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எந்த நடவடிக்கையையும் சிறிலங்கா இராணுவம் மேற்கொள்ளும்.
ஒரு இராணுவ முகாம் எவ்வாறு இருக்கும் என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். இராணுவத்தினருக்கான நிரந்தரமான தங்குமிட வசதிகளைக் கொண்டது தான், ஒரு இராணுவ முகாமாகும்.
முகாமுக்குத் தேவையான பிரதேசத்தை மாத்திரம் நாம் பேணிக்கொள்வோம். ஏனைய நிலங்களை விடுவிப்போம். சரியான இடங்களில் தான், இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.