சிறிலங்காவின் அரச, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க உயர்அதிகாரி முக்கிய பேச்சு
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட், சிறிலங்கா அரசாங்க மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தினார்.
நேற்றுக்காலை கொழும்பில் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்கவை, வில்லியம் ரொட் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இதன் பின்னர், சிறிலங்காவின் ஜனநாயக மறுசீரமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக, சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இதையடுத்து. நேற்று பிற்பகல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினருக்கும், வில்லியம் ரொட் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், மேலதிக நல்லிணக்க முயற்சிகளில் சிறிலங்காவுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புத் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாக, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.