சம்பந்தனைச் சந்தித்தார் நோர்வே பிரதமர்
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நோர்வே பிரதமர் எர்ணா சொல்பேர்க் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கொழும்பில் இன்று நடந்த இந்தச் சந்திப்பின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகள், புனர்வாழ்வு, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்தப் பேச்சுத் தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நோர்வே பிரதமர் இன்று காலை தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.