மேலும்

துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதற்கு இந்தியாவே காரணம் – சிறிலங்கா அரசு ஒப்புதல்

port-cityமகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், சீனாவின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட  கொழும்புத் துறைமுக நகரத் திட்டம், இந்தியாவின் அழுத்தங்களினால் தான் இடைநிறுத்தப்பட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் முதல்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில், அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இந்தியாவின் அழுத்தங்களினால் தான், துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட துறைமுக நகரத் திட்டம், 2015ஆம் ஆண்டு, மார்ச் முதல் வாரத்தில்,இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு ஒரு வாரம் முன்னதாக, மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டது.

வெளிநாட்டு அழுத்தங்களினால் இந்தத் திட்டம் இடைநிறுத்தப்படவில்லை என்றும், உடன்பாட்டில் உள்ள குறைபாடுகள் மற்றும் சுற்றாடல் காரணிகளைக் கருத்தில் கொண்டே இந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது.

எனினும், பாதுகாப்புச் செயலராகப் பதவியில் இருந்த போது, புதுடெல்லிக்கு அழைக்கப்பட்ட தன்னிடம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும்  கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை கைவிடுமாறு அழுத்தம் கொடுத்திருந்தார் என்று கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *