ஓயாமடுவவில் இராணுவ ஆயுத களஞ்சியத் தொகுதி – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி
அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ஓயாமடுவவில், அனைத்துலக தர நியமங்களுக்கு ஏற்ப, ஆயுதக் களஞ்சியத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இந்தப் பிரதேசத்தில் ஆகக்குறைந்த சன அடர்த்தி இருப்பதைக் கருத்தில் கொண்டே, ஆயுதக் களஞ்சியத்தை இங்கு அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஓயாமடுவவுக்கு ஆயுதக்களஞ்சியத் தொகுதியை மாற்றும் அமைச்சரவைப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சரான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.
போர்க்காலத்தில் ஆயுதங்களும் வெடிபொருட்களும் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள தற்காலிக களஞ்சியங்களில் சேமிக்கப்பட்டு வந்தன.
அண்மையில் சலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தை அடுத்து. சன அடர்த்தி குறைவான இடத்தில் நவீன வசதிகள் மற்றம் சர்வதேச தரத்துடனான ஆயுதக்களஞ்சியம் அமைக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓயாமடுவ பிரதேசம் அனுராதபுர மாவட்டத்தில் வில்பத்து சரணாலயத்துக்கும், மகாவிலாச்சிய குளத்துக்கும் இடையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.