மேலும்

அதிகாரப்பகிர்வு – ஒரே நாளில் குத்துக்கரணம் அடித்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

susil premajayanthaஆட்சியமைத்து ஆறு மாதங்களுக்குள்- 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை அளித்து, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரே நாளில் அந்த நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

நேற்று முன்தினம், வெளியிடப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கையில், சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறு மாதங்களுக்குள் முன்வைக்கப்படும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த, வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரையில் அதிகாரப்பகிர்வுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கை, வடக்கையும், கிழக்கையும் ஒன்றிணைத்த தமிழர் தாயகமாகும்.

அவர்களது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நாட்டில் மீண்டுமொரு பிரச்சினைக்கு வித்திட அதிகவாய்ப்புகள் உள்ளன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் தேசிய அரசாங்கத்தில் முக்கிய பங்குதாரர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பேயாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஓரணியில் தான் செயற்படுகின்றனர்.

இவர்களது தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கும் தமிழீழத்தை ரணில் நிச்சயமாக பெற்றுக்கொடுப்பார்.

அதற்கான காய்நகர்த்தல்கள் கடந்த அதிபர் தேர்தலின் போதிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

அதேபோல் ரணில், சம்பந்தன் கூட்டணியின் புதிய உறுப்பினராக ஜேவிபி  தலைவர் அனுரகுமார திசநாயக்கவும் கைகோர்த்துள்ளார்.

இவர்களின் பிரிவினைவாத செயற்பாடுகளை இந்த ஏழு மாதகாலத்தில் மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.

அதேபோல் தொடர்ந்தும் இவர்களுக்கு மக்கள் அனுமதி வழங்கினால் இந்த நாட்டில் மீண்டுமொரு ஆயுதக் கலவரம் உருவாகும் நிலை ஏற்படும்.

கடந்த காலத்தில் நாம் ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்.

நாம் வென்றெடுத்துள்ள சமாதானத்தை மீண்டும் பிரிவினையின் பக்கம் நகர்த்திவிடக் கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவது குறித்து என்னால் பதில்கூற முடியாது.

எதிர்காலத்தை எங்களால் அனுமானிக்கவும் முடியாது. ஆனால் எந்தவொரு நிலையிலும் பிரிவினைவாதத்துடன் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்ளும் நிலைபாட்டில் நாம் இல்லை.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவில் ஆட்சியை அமைக்கும் நிலைமை ஒன்றும் வரப்போவதில்லை. ஏனெனில் தேர்தலின் பின்னர் நாம் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அதேபோல் நாம் அதிகாரத்துக்கு வந்தால் எதிர்க்கட்சியில் இருந்து பலர் எம்முடன் வந்து கைகோர்ப்பார்கள்.

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை அதிகாரப் பகிர்வுக்கு செல்ல முடியாது.

நாம் கடந்த காலத்தில் 13 ஐ வழங்கும் ஒரு நிலைப்பாட்டிலும் இருந்தோம். ஆனால் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளையும் போரையும் கவனத்தில் கொண்டே அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு செல்ல முடியாமல் போய்விட்டது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *