சமஸ்டி கேட்கும் சம்பந்தன் குப்பைத் தொட்டிக்குள் போவாராம் – ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது
சமஸ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால், சம்பந்தன் போன்றவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் என்று எச்சரித்துள்ளார், ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க.
கொழும்பில் தமது கட்சி பணியகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நல்லிணக்கத்துக்கும் சமாதானத்திற்கும் தடையாக அமைந்துள்ளது.
இரு பிரதான கட்சிகளும் ஒன்றுபட்ட இலங்கை கொள்கையை ஏற்றுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை எந்த வகையிலும் நடைமுறைச் சாத்தியமற்றது.
1948ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தமிழ் தேசிய தலைவர்கள் இதேபோன்ற இனவாத தேர்தல் அறிக்கைகளையே வெளியிட்டு வந்துள்ளனர்.
தமிழ் அரசு கட்சி ஆரம்பித்ததால் தமிழ் இனம் வேறு திசைக்கு தள்ளப்பட்டது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஜனநாயகத்துக்கிருந்த தடைகளை அகற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியது.
இதேபோன்று தமிழ்ச் சமூகம் மீண்டும் இனவாதத்தின் பக்கம் செல்வதை தடுக்க தமிழ் அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்தும் தமிழ்ச் சமூகத்தை தவறாக வழி நடத்தி சமஸ்டி ஊடாக நாட்டைத் துண்டாட முயன்றால், இரா.சம்பந்தன் போன்றவர்களும் வரலாற்றில் குப்பை தொட்டிக்குள் போக நேரிடும்.
தமிழீழக் கருத்தை தமிழ் சமூகத்திற்கு ஊட்டி ஆயுதம் ஏந்த உதவிய இவர்கள் இன்று ஆயுதமேந்த முடியாததால் மீண்டும் இனவாத அரசியலின் ஊடாக தமது நோக்கத்தை நிறைவேற்ற முனைகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Who the hell is this Nishantha to decide the fate of the Tamil Leadership and their determination. He would be more healthier if he think of his own onions better