3 ஆண்டுகளுக்கு முன் அவுஸ்ரேலியா சென்ற இரு தமிழ் இளைஞர்கள் டார்வின் விபத்தில் பலி
அவுஸ்ரேலியாவின் டார்வின் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இருவரும், இலங்கையில் இருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்கள் என்று அவர்களின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
டார்வினில் உள்ள நகாரா பகுதியில் ட்ரோவர் வீதியில் நிகழ்ந்த விபத்தில், 32, மற்றும் 35 வயதான இரு இளைஞர்கள் மரணமாகினர்.
இவர்கள் விபத்துக்குள்ளான பகுதிக்கு வந்திருந்த இவர்களின் நண்பர்களே, வளமான வாழ்வைத் தேடி, அவுஸ்ரேலியா வந்த தமது நண்பர்களுக்கே இந்தக் கதி ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.
தமது நண்பர்களுக்கு என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக வந்திருப்பதாக, தக்சன் முருகேசு தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும் நகாரா பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கூட்டாக குடியிருந்து வந்தவர்களாவர்.
உயிரிழந்த இரு இளைஞர்களும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், சிறிலங்காவில் இருந்து படகு மூலம் அவுஸ்ரேலியா வந்திருந்தனர்.
மெல்பேர்னில் வசித்து வந்த இவர்கள், ஒரு ஆண்டுக்கு முன்னரே, டார்வினுக்கு குடிபெயர்ந்தனர்.
கடற்கரை ஒன்றுக்குச் சென்று விட்டுத் திரும்பிய போது, இவர்கள் பயணித்த டொயோட்டா குரூசர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பாடசாலை அருகேயிருந்த மரம் ஒன்றுடன் மோதியது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 26 வயதுடன் வாகனச் சாரதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
அவர் தற்போது டார்வின் ரோயல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் இலங்கைத் தமிழராவார்.