இன்று மாலை சிறப்பு அறிவிப்பை வெளியிடுகிறார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் சிறப்பு செய்தியாளர் மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த சிறப்பு செய்தியாளர் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த செய்தியாளர் மாநாட்டில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை, எதிர்கால திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடமளிக்கப்பட்ட விடயத்தில், மைத்திரிபால சிறிசேன அதிருப்தியடைந்துள்ளதாலும், இதனால் அவர் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.