எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் மகிந்த – வேட்புமனுவில் இரகசியமாக கையெழுத்திட்டாரா?
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்துக்கு இன்று பிற்பகல் வந்திருந்ததாகவும், இவர் இரகசியமாக வேட்புமனுவில் கையெழுத்திட வந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு 7இல் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவின் செயலகத்துக்கு மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் வந்திருந்ததை, பல்வேறு தரப்புகள் உறுதிப்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து அவர் இரகசியமாக வேட்புமனுவில் கையெழுத்திட வந்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
வேட்புமனுக்களில் கையெழுத்திடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவரின் செயலகம் இன்று காலையில் இருந்து பரபரப்பாக காணப்படுகிறது.
இன்று காலை தொடக்கம் கட்சியின் மூத்த தலைவர்களும், வேட்பாளர்களும் இங்கு வந்து செல்கின்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.