மகிந்தவுக்கு இடமளிக்கமாட்டேன் – சந்திரிகாவுக்கு மைத்திரி வாக்குறுதி?
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பளிக்க மாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்றுமாலை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்து, உதவியாளர்களின்றி தனித்துப் பேச்சு நடத்தியிருந்தார் மைத்திரிபால சிறிசேன.
இந்தச் சந்திப்பின் போதே, மகிந்த ராஜபக்சவுக்கோ அல்லது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வேறு எவருக்குமோ, போட்டியிட இடமளிக்கமாட்டேன் என்று சந்திரிகா குமாரதுங்கவிடம் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடமளிக்கப்பட்டுள்ளதாக, அதன் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த அறிவித்திருந்த போதிலும், அதுகுறித்து எந்தக் கருத்தையும் இதுவரை வெளியிடாமல் தவிர்த்து வருகிறார் மைத்திரிபால சிறிசேன.
இந்த நிலையிலேயே நேற்றுமாலை சந்திரிகா குமாரதுங்கவை அவர் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர், கருத்து வெளியிட்ட சந்திரிகா, தனது நிலைப்பாடு குறித்து 24 மணிநேரத்துக்குள் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த சந்திரிகா குமாரதுங்கவின் 70 ஆவது பிறந்தநாள் நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மகிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக சுசில் பிரேம் ஜெயந்த அறிவித்த பின்னர், இவர்கள் மூவரும் பகிரங்கமாக சந்தித்துக் கொண்ட முதல் நிகழ்வு இதுவாகும்.
இதையடுத்தே, சந்திரிகாவும். மைத்திரிபால சிறிசேனவும் தனியான பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.