மகிந்தவுக்கு வேட்புமனு – மற்றொரு குத்துக்கரணம் அடிப்பாராம் மைத்திரி
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மகிந்த ராஜபக்சவை அனுமதிப்பது தொடர்பான விடயத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றொரு குத்துக்கரணம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட அனுமதிக்க மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்ததையடுத்து, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார்.
எனினும், மைத்திரிபால சிறிசேன மற்றொரு குத்துக்கரணம் அடிக்கக் கூடும் என்று வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து அந்த அதிகாரி தனது பதவி விலகல் முடிவை நிறுத்தி வைத்துள்ளார்.
ஏற்கனவே மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட இடமளிப்பதில்லை என்று மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
ஆனால், நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம் ஜெயந்த வெளியிட்ட அறிக்கையில், மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.
எனினும், சிறிலங்கா அதிபர் அந்த முடிவில் இருந்து பின்வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தங்களை அடுத்தே அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு மைத்திரிபால சிறிசேன வாய்ப்பளிக்கமாட்டார் என்றும், அவரைத் தாம் இப்போதும் நம்புவதாகவும், ஐதேகவின் உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.