மேலும்

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு நுழைவிசைவு மறுத்தது அமெரிக்கா

சிறிலங்காவின் முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதியும், பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவருமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கு, அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிப்பட்ட பயணமாக ஜூன் 30ஆம் நாள் அமெரிக்காவுக்குச் செல்வதற்கு, ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் அவரது மனைவியும் கடந்த மே மாதம், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தனர்.

ஜெனரல் ஜெயசூரியவின் மனைவிக்கு, கடந்த மே மாதமே அமெரிக்கா செல்வதற்கான நுழைவிசைவு வழங்கப்பட்டு விட்டது.

ஆனால், ஜெனரல் ஜெயசூரியவின் கடவுச்சீட்டு இன்னமும், அமெரிக்கத் தூதரகத்தினால் மீள ஒப்படைக்கப்படவில்லை.

இதுகுறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவரிடம் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்கு, தனிப்பட்ட நபர்களின் விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவிப்பதில்லை என்பது தமது கொள்கை ரீதியான தீர்மானம் என்று தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரில், வன்னிப்படைகளின் தளபதியாக இருந்த ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டு, பின்னர் கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.

அண்மையிலேயே அவர் ஓய்வுபெற்ற அவர், பிரேசிலுக்கான சிறிலங்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, போர்க்குற்றங்கள் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் பங்கெடுத்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உள்ளிட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு நுழைவிசைவு வழங்க அமெரிக்கா மறுப்புத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *