எந்தக் கட்சியில் போட்டி என்று 24 மணிநேரத்தில் அறிவிக்கிறார் மகிந்த
சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவதென்று இன்னும் 48 மணிநேரத்தில் அறிவிக்கவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வானொலிச் செவ்வியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலோ, அல்லது ஏனைய கூட்டணியிலோ போட்டியிடுவது என்று இப்போது கூற முடியாது என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மெதமுலானவில் நேற்று நடந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த மகிந்த ராஜபக்ச, எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்று அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டால், சிறிலங்கா ஜாதிப பலய என்ற கட்சியின் மூலம் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது,
தேசப்பிரேமி ஜாதிக பெரமுன என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட கட்சி தற்போது, சிறிலங்கா ஜாதிக பெரமுன என்று மாற்றப்பட்டுள்ளது.
இதன் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க ஆவார். இவர் விமல் வீரவன்சவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.