மகிந்த எந்த முடிவை எடுத்தாலும் சுதந்திரக் கட்சி உடைவது உறுதி
நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இது தொடர்பாக நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவை போட்டியிட அனுமதித்தால், தாம் கட்சியில் இருந்து வெளியேறி, ஐதேகவில் இணைந்து கொள்ளப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியினரே இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்சவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கக் கூடாது என்றும், தேர்தலுக்குப் பின்னர் ஐதேகவுடன் இணைந்து தேசிய அரசை அமைத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் மகிந்த ராஜபக்ச இன்று காலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முடிவை எடுத்தாலும் கூட கட்சியில் பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாத்தாகிவிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் ஐதேகவின் பட்டியலில் போட்டியிடவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.