துறைமுக நகரத் திட்டத்தை ஆராய புதிய குழு நியமனம்
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிப்பதா என்பது குறித்து ஆராய புதிய குழுவொன்றை சிறிலங்கா அமைச்சரவை நியமித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த, இதுதொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சீனாவின் 1.4 பில்லியன் டொலர் முதலீட்டில், ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை, தற்போதைய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் இடைநிறுத்தியிருந்தது.
இந்த திட்டம் தொடர்பாக மீளாய்வு செய்யவும் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அந்தக் குழு திட்டத்தை தொடர்வதற்கு சாதகமாக அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையிலேயே, உயர்மட்ட அரச அதிகாரிகளைக் கொண்ட புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் செயலர் தலைமையிலான இந்த அதிகாரிகள் குழுவே, இடைநிறுத்தப்பட்ட துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிப்பதாக என்பது தொடர்பாக இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.
இந்த திட்டத்தில் ஊழல் எதுவும் இடம்பெறவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், ஆனால் திட்டம் முறையான அனுமதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டதா என்ற கரிசனையே உள்ளதாகவும் அண்மையில், அமைச்சர் ஏரான் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.