சம்பூர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
சம்பூரில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கைத்தொழில் வலயத்துக்காக தனியார் காணிகளை, சுவீகரிக்க வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யும் சிறிலங்கா அதிபரின் வர்த்தமானி அறிவிப்புக்கு, சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
சம்பூரில் பொதுமக்களின் காணிகளைச் சுவீகரித்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், முதலீட்டுச்சபையின் மூலம், சிறிலங்கா கேற்வே இன்டஸ்றீஸ் என்ற நிறுவனத்துக்கு, கனரக கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக குத்தகைக்கு வழங்கியிருந்தது.
எனினும், சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறுவதற்காக, அவர்களிடம் இருந்து சுவீகரிக்கப்பட்ட ஒரு பகுதி காணிகளை மீள ஒப்படைக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த்து.
இதன் ஒரு கட்டமாக, கனரக பொருளாதார முதலீட்டு வலயத்துக்காக காணிகளை, சுவீகரிக்கும் வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதற்கு எதிராக, சிறிலங்கா கேற்வே இன்டஸ்றீஸ் நிறவனம் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, குறிப்பிட்ட நிறுவனத்தின் சார்பில், காணிகளை மீள வழங்குவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு கனரக கைத்தொழில்சாலைகளை நிறுவும் இந்த திட்டத்தினால், நேரடியாகவும் மறைமகமாகவும் 25 ஆயிரம் பேர் தொழில்வாய்ப்புப் பெறுவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, சம்பூர் நிலச்சுவீகரிப்பை ரத்துச் செய்யும் வர்த்தமானி அறிவிப்பை செயலற்றதாக்க வேண்டும் என்று குறிப்பிட்ட நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்படும் வரை, சம்பூர் காணிகளை விடுவிக்கும் உத்தரவை இடைநிறுத்தி வைக்க சிறிலங்கா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினால், சம்பூரில் மீள்குடியேற்றம் சிக்கலான நிலையை எட்டியுள்ளது.