கோத்தாவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு, சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தன்னைக் கைது செய்யும் சிறிலங்கா காவல்துறையினரின் முயற்சிக்குத் தடைவிதிக்குமாறு கோரி, கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை இன்று மூன்று நீதியரசர்களைக் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, இந்த மனுவை விசாரிக்கும் குழுவில் இருந்து நீதியரசர் புவனேக அலுவிகார தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று கோத்தாபய ராஜபக்சவின் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதியரசர்கள் குழு, இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில், அவரைக் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிப்பதாக அறிவித்தனர்.