மேலும்

ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவுக்கும் தூதுவர் பதவி – நல்லாட்சி அரசிலும் இராணுவத்துக்கு முன்னுரிமை

Gen. Jayasuriyaசிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதியாக பதவி வகிக்கும், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

பிரேசிலுக்கான தூதுவர் பதவிக்கு சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, விரைவில் உயர் பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக முன்னிலையாவார்.

தாம் இராஜதந்திரப் பதவிக்குத் தமது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேவேளை, இவர் கூட்டுப்படைகளின் தளபதி பதவியில் இருந்து விலகிய பின்னர், அடுத்த தளபதியாக, தற்போது சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக உள்ள எயர் மார்ஷல் கோலித குணதிலக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சேவையில் உள்ள முப்படைகளின் தளபதிகளில் மூத்தவருக்கே இந்தப் பதவி வழங்கப்படுவது வழக்கம். தற்போதுள்ள முப்படைத் தளபதிகளில், விமானப்படைத் தளபதியே சேவையில் மூத்தவராவார்.

இதனிடையே, மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், உயர்மட்ட இராஜதந்திரப் பதவிக்குப் பரிந்துரை செய்துள்ள இரண்டாவது உயர்மட்ட இராணுவ அதிகாரி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பாகிஸ்தானுக்கான தூதுவர் பதவிக்கு, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்கவின் பெயரை அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளதாக, உயர்பதவி நியமனங்களுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிவித்திருந்தது.

இராஜதந்திரப் பதவிகளுக்கு, அதிகளவு இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளதாக முன்னைய அரசாங்கத்தின் மீது தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *