மே 19இல் மாத்தறையில் நடக்கிறது போர்வீரர்கள் ஞாபகார்த்த அணிவகுப்பு
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்டதை நினைவு கூரும் வகையில், போர்வீரர்கள் ஞாபகார்த்த அணிவகுப்பு எதிர்வரும் 19ம் நாள் மாத்தறையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை கடற்கரை வீதியில் வரும் 19ம் நாள் காலை 8 மணியளவில் இந்த அணிவகுப்பு நடைபெறவுள்ளது.
இந்த அணிவகுப்பில், சிறிலங்காவின் முப்படைகளும் பங்கேற்கவுள்ளவுடன், ஆயுதப்படைகளின் பிரதம தளபதியான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்கும், பொதுமக்கள் மற்றும், அழைப்பாளர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், போர் வெற்றி நாளாக இதுவரை கொண்டாடப்பட்டு வந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் இதனை, போர்வீரர்கள் ஞாபகார்த்த நாள் என்று அறிவித்துள்ளது.