மேலும்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை

Jayalalithaசொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சற்று முன்னர், நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை அறிவித்துள்ளார்.

பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கின், மேன் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம், கடந்த ஆண்டு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும், 100 கோடி ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இதனை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பே இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில், ஜெயலலிதா வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு முற்றிலும் புனையப்பட்ட ஒன்று எனவும், சொத்துக்கள் குறித்து மிகையான தகவல்கள் கூறப்பட்டுள்ளதாகவும், தனது தீர்ப்பில், நீதிபதி குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவுடன், அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படடுள்ளனர்.

இதையடுத்து, தமிழ்நாடு எங்கும் அதிமுகவினர் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பினால் கடந்த ஆண்டு தகுதியிழப்பு செய்யப்பட்டு, முதல்வர் பதவியை இழந்து ஜெயலலிதா, மீண்டும் வரும் 17ம் நாள் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *